Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • முரட்டுத்தனமான உங்கள் குழந்தைகளை கையாளுவது எப்படி?

முரட்டுத்தனமான உங்கள் குழந்தைகளை கையாளுவது எப்படி?

By: Monisha Thu, 13 Aug 2020 2:49:14 PM

முரட்டுத்தனமான உங்கள் குழந்தைகளை கையாளுவது எப்படி?

டீன் ஏஜ் பருவத்தை துவங்கும் முன்பு உங்கள் குழந்தைகள் சில நேரங்களில் பெரிய தலைவலிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. உங்களுடைய செல்லமான, இனிமையான, பாசமான குழந்தைகள் திடீரென்று பிடிவாதம் பிடிக்கும், மரியாதை இல்லாமல், அடிக்கடி முரட்டுத்தனமான கோபத்துடன் நடந்து கொள்ள தொடங்குவதைப் பார்க்கும் எல்லா பெற்றோருக்கும் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளும், சமாதான பேச்சுகளும் திட்டுகளும் ஒன்றுமே பலனளிக்காமல் போகிறது என்பதை அறிந்து கொள்ளும்போது இன்னும் கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகள் டீன் ஏஜுக்கு வரும்போதுதான் இப்படி சிடுசிடுவென மாறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆனால், அது முழு உண்மை அல்ல, குழந்தைகளுக்கு, முரட்டுத்தனமும் எதிர்த்து பேசும் குணமும் கொஞ்சம் முன்னதாகவே தொடங்கி விடுகிறது என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் நீங்கள் பதற்றமடைய தேவையில்லை. திடீரென்று தொடங்கும் மோசமான நடத்தை தொடர்பான பிரச்சனைகளை எளிதில் கையாளலாம், இதோ உங்களுக்கான சில உத்திகள்.

உணர்ச்சி வசப்பட வேண்டாம்
ஒரு கெட்ட நடத்தையைக் கையாளும்போது, அதனால் உங்களுக்கு மிகவும் அதிகபட்ச கோபமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும் அந்தக் கோபத்தை குழந்தைகள் மேல் காட்டினால், அது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடும், இன்னும் கூடுதல் கோபத்திற்கும் வெறுப்புக்கும் காரணமாகி விடும். அதற்கு பதிலாக, இதை உணர்ச்சி வசப்படாமல் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். முதலில், இது வளர்தலில் மிகவும் முக்கியமான ஒரு கட்டம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் உங்கள் குழந்தை இனிமேல் குழந்தையாக இருக்கப் போவதில்லை. இந்த நேரத்தில், உங்கள் குழந்தை உடல் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்களை எதிர்கொள்ளத் தொடங்குவார்கள். கூடவே பள்ளியில் தரப்படும் அழுத்தங்களும்; சக தோழர்களுடன் நட்பைத் தொடர்வதில் ஏற்படும் சிரமங்களும் சேர்ந்து கொள்ளும். உங்கள் குழந்தை உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் போவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவருக்கும் சமாளிக்க ஏராளமான பிரச்சனைகள் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

teenagers,children,rudeness,anger,hatred ,டீன் ஏஜ்,குழந்தைகள்,முரட்டுத்தனம்,கோபம்,வெறுப்பு

அமைதியாகக் கையாளுங்கள்
குழந்தை தன்னுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள நினைத்தாலும், அவர்கள் எடுத்துக்காட்டின் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய நடத்தையைப் பற்றி உங்களிடமிருது கற்று கொள்வார்கள். அதனால் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் குழந்தையை நோக்கி நீங்கள் கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்; நீங்கள் கட்டுப்பாட்டு இழந்து அவர்களை அடித்தால், அதேபோலவே ஒரு வன்முறை நிறைந்த அடித்து பழகும் ஒரு டீனேஜரை எதிர்பார்க்கலாம். சூழ்நிலையை அமைதியாகக் கையாளுங்கள், அதேநேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடாதீர்கள். எதனால் கோபமடைகிறாய் என்று கேளுங்கள், அதற்கு பதிலாக மன உளைச்சலுடன், கோபத்துடன் எதிர்த்து பேசாதீர்கள். நேர்மையான, நீங்கள் அந்த வயதில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிற தர்க்கரீதியான பதில்களை சொல்லுங்கள். நீங்கள் மரியாதை கொடுத்தால், உங்களுக்கும் பதிலுக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தை தன்னை சீரியஸாக மற்றவர்கள் கருத வேண்டும், பெரியவர்களைப் போல நடத்த வேண்டும் என்பதற்காகவே முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறா(ன்)ள் என்பதை மறக்காதீர்கள்.

விதிமுறைகளை அமலாக்க வேண்டும்
பல பெற்றோர்கள், பருவ வயதினரை சமாளிக்கும்போது, விட்டுகொடுத்து போக முடிவெடுக்கிறார்கள், அதனால் அவர்கள் கண்டிப்பதை மிகவும் குறைத்து கொள்கிறார்கள். ஆனாலும், இதில் காலம் கடந்த பின் ஏற்படும் அபாயங்கள் இருக்கின்றன. நீங்கள் கண்டிப்பான விதிமுறைகளை அமலாக்கி, அவற்றைப் பின் தொடராதபோது தண்டனை தருவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுடைய முடிவுகளை கவனமாக எடுத்திடுங்கள், சூழ்நிலைகளில் தேவைப்படும்போது, கொஞ்சம் விட்டு தந்து நடந்து கொள்வதில் தவறில்லை, ஆனால் வரம்புகளை அமைப்பது முக்கியம், அவர்கள் இன்னும் குழந்தைகள்தான், அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

teenagers,children,rudeness,anger,hatred ,டீன் ஏஜ்,குழந்தைகள்,முரட்டுத்தனம்,கோபம்,வெறுப்பு

அடிபணிந்து போகாதீர்கள்
எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி, எப்போதும் நீங்களே அதிகாரமிக்கவராக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் நிலைக்கு இறங்கிபோய் பேசுவது, குறிப்பாக அவர்கள் கோபத்தில் இருக்கும்போது பேசுவது அவர்களுக்கு கூடுதலான சாதகத்தைத் தந்து விடலாம். இதேபோல அடிக்கடி நடக்கும் வாய்ப்பிருந்தால், உங்களால் கையாள முடியாத அளவுக்கு சூழ்நிலை கடினமாக இருந்தால், பேச்சுவார்த்தையில் இருந்து விலகி, குழந்தை அமைதியடையும் வரை காத்திருங்கள். ஆனால், நீங்கள் அடிபணிந்து போக முடிவெடுக்காதீர்கள். அதுவும் ஒரு அதிகாரப் போட்டி ஏற்படும் நேரத்தில் அப்படி செய்யக் கூடாது. ஏற்றுக்கொள்ளத்தக்க நடத்தை, முரட்டுத்தனம் மற்றும் காயப்படுத்தும் நடத்தை என்று இருப்பதை அவர்களுக்குப் புரிய வைத்திடுங்கள். நீங்கள் விரும்பினால், கோபங்கள் குறைந்தவுடன், அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் பேசுங்கள்.

வேலைகளை நிர்ணயித்து கொடுங்கள்
எதையெல்லாம் தவறாக செய்கிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் தொடர்ச்சியாக அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தால், அவர்கள் உங்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வார்கள். பதின் வயதினர் இயல்பாகவே உங்களை விடவும் புத்திசாலிகள் என்று தங்களை நினைத்துக் கொள்கிறார்கள், நீங்கள் ஆலோசனை பேச்சுகளை பேசிக்கொண்டிருப்பதால் அந்த எண்ணம் மாறப்போவதில்லை. அவர்களுடைய செயல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிகாட்டுவதற்கு பதிலாக, அவர்களுக்கான வேலைகளை நிர்ணயித்து, அவற்றைப் பின்பற்றா விட்டால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களே சமாளிக்க சொல்லுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தை அறையை சுத்தம் செய்ய மறுத்தால், அவர்களுடைய பாக்கேட் மணியை நிறுத்தி விடுங்கள், அதற்கு பதிலாக அழுகை, கோபம் எதிர்கொண்டால், விட்டுக் கொடுக்காதீர்கள். உறுதியாக கையாளுங்கள்!

Tags :
|