இந்தியாவில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகஸ்ட் 7ல் உருவாகிறது

இந்தியா: இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும் பரவலாக மழை பொழிவை தரக்கூடியவை ஆகும். இதில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கும்.

மேலும் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி பின்பு படிப்படியாக வடகிழக்கு இந்தியா முழுவதும் பரவத் தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதாகவும், மேலும் மழையின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த பருவமழை 103 விழுக்காடாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் எனவும் , வடகிழக்கு பகுதிகளில் குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு சில வாரமாகவே தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை இருந்துகொண்டு வருகிறது.

மேலும் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் தொடர் கனமழை பெய்து வருவதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு கனமழை இருக்கும் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வடமேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதன் காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 8 ம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் எனவும் தெரிவித்துள்ளது.