அமைச்சர் வலியுறுத்தல்... ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை விரைவில் அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியிருக்கிறார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் ஏற்கனவே இணைந்திருந்த 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் தற்போது ஆகஸ்டு 1 முதல் ஜம்மு, காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்கள் சேர்ந்திருக்கின்றன. இதுவரை 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சேர்ந்திருக்கின்றன. மொத்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் 65 கோடி (80 சதவிகிதம்) பயனாளிகள் இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எங்கு வேண்டுமானாலும் உணவு தானியங்களைப் பெற முடியும்.
மீதமிருக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இந்தத் திட்டத்தில்
மார்ச் 2021-க்குள் இணைவார்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 2.98 லட்சம் குடும்ப அட்டைகளில் இருந்து பெயர்கள்
நீக்கப்பட்டது என்று கூறியிருக்கும் பாஸ்வான், அவர்களது பெயர்கள் தவறுதலாக
நீக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்
அவர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டுமென்று
கேட்டுக்கொண்டார்.
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம் குறித்து
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர தரப்பினரிடம் இருந்து நேர்மறை
பின்னூட்டங்களை உணவு மற்றும் பொது விநியோகத் துறை பெற்று வருவதாகத்
தெரிவித்த அவர், குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது உணவு தானியப் பங்கை
எந்தவித தாமதமும், தடங்கலும் இல்லாமல் பெறுவதை உறுதி செய்ய மாநிலங்கள்,
யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் குறிப்பிட்ட 24 மாநிலங்கள்,
யூனியன் பிரதேசங்களில் ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா நகர், ஹவேலி
மற்றும் டாமன், டையு, கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு,
காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,
மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம்,
தெலங்கானா, திரிபுரா, உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகியவை
அடங்கும்.
இந்தத் திட்டத்தில் இதுவரை சேராத மாநிலமாக ராம் விலாஸ்
பாஸ்வான் குறிப்பிட்டதில் தமிழ்நாடும் இருக்கிறது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி
முதல் தமிழ்நாடும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் சேருவதாக
இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அது தள்ளிப் போனது. தமிழகத்தில்
சில மாவட்டங்களில் இப்போது இந்த திட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.