கூட்டணி கட்சி எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: வரும் 2024 மக்களவைத் தேர்தல் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களை, தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து, பிரதமர் மோடி இன்று முதல் வருகிற 10ஆம் தேதி வரை ஆலோசனை நடத்துகிறார்.

இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்க தேசிய ஜனநாயகக்கூட்டணி எம்பிக்கள் கொண்ட பத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 6 மணி அளவில் நடைபெறும் முதல் அமர்வில் உத்தரப்பிரதேசம் எம்பிக்களை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். 7 மணிக்கு 2வது அமர்வில் மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா எம்பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு அமர்வுகளிலும் மத்தியஅமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் , பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.