சினிமா பாணியில் கொள்ளையடித்து விட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்கள்

புதுக்கோட்டை: சினிமா பாணியில் கொள்ளையடித்து விட்டு அந்த வீட்டில் மிளகாய் பொடியை வீட்டிற்குள் தூவி சென்றுள்ளனர் கொள்ளையர்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி இவர் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வியாபாரம் நிமித்தமாக அறந்தாங்கி சென்று விட்டு இன்று மாலை அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து கணேஷ்நகர் காவல்நிலையதிற்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 82.5 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் கொள்ளையர்கள் சினிமா பாணியில் எந்த தடயமும் கிடைக்காமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.


ஆனால் கைரேகை நிபுணர்கள் கதவு, பீரோ உள்ளிட்டவைகளில் இருந்த கைரேகையை பதிவு செய்தனர்.. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சினிமா பாணியில் மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.