- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று அசத்திய பாரதி ஏர்டெல் நிறுவனம்
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று அசத்திய பாரதி ஏர்டெல் நிறுவனம்
By: Karunakaran Sat, 05 Dec 2020 11:45:00 AM
இந்திய டெலிகாம் சந்தையில் செப்டம்பர் 2020 மாதத்தில் ஏர்டெல் நிறுவனம், ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை பெற்று இருப்பது இரண்டாவது முறை ஆகும்.
இதே காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை இழந்து இருப்பதாக டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டிராய் அறிக்கையின் படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 சதவீதம் அதிகரித்து தற்சமயம் 32.66 கோடியாக இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 0.36 சதவீத வளர்ச்சி பெற்று 40.04 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தற்சமயம் 29.5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
மேலும் டெலிகாம் சந்தையில் 35.19 சதவீத பங்குகளுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னணியில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 28.44 சதவீத பங்குகளையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 27.73 சதவீதம், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 10.36 சதவீதம், எம்.டி.என்.எல். நிறுவனம் 0.29 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.