Advertisement

நகைக் கடைகளில் நேற்று விற்பனை களைகட்டியது

By: vaithegi Sun, 23 Apr 2023 10:33:50 AM

நகைக் கடைகளில் நேற்று விற்பனை களைகட்டியது

சென்னை: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதையடுத்து இந்தாண்டு அட்சய திருதியை திதி நேற்று காலை 7.49 மணிக்குத் தொடங்கி, இன்று காலை 7.47 மணிவரை நீடிக்கிறது. எனவே நகை வியாபாரிகள் நேற்று காலையிலேயே அட்சய திருதியை சிறப்பு விற்பனையைத் தொடங்கினர்.

சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், பாரிமுனை, புரசைவாக்கம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் உள்ள நகைக் கடைகள் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. காலை முதலே பொதுமக்களும் தங்க நகைகளை வாங்க கடைகளில் திரண்டதால், பல்வேறு கடைகளில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால், பல கடைகளில் சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு, நகைகள் விற்பனை செய்யப்பட்டன.

sales,jewellery ,விற்பனை ,நகைக் கடை

மேலும் அட்சய திருதியையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்தன. சில கடைகளில் பவுனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கடைகளில் தங்கம், வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடி வழங்கப்பட்டது. மேலும், நகைக் கடைகளில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதிலும் குறிப்பாக, எடை குறைவான நெக்லஸ், ஃபேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் போன்றவை புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதேபோன்று, வைரம், பிளாட்டினம் நகைகளையும் சிலர் வாங்கினர். சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கும் விற்பனையானது.

மேலும் 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.48,472-க்கு விற்பனையானது. இதேபோல, 1 கிராம் வெள்ளி ரூ.80.40-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80,400-க்கும் விற்பனையானது. அட்சய திருதியை தினத்தன்று தங்கம் விலை குறைந்ததால், நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், தமிழம் முழுவதும் நேற்று விற்பனை மிகவும் களைகட்டியது.

Tags :
|