- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- கடந்தாண்டை விட இந்தாண்டு சரக்கு அளவு குறைந்துள்ளது... சர்வதேச சரக்கு முனையம் தகவல்
கடந்தாண்டை விட இந்தாண்டு சரக்கு அளவு குறைந்துள்ளது... சர்வதேச சரக்கு முனையம் தகவல்
By: Nagaraj Tue, 07 Mar 2023 09:56:45 AM
மீனம்பாக்கம்: கடந்த ஜனவரி மாதத்தை விட, இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை விமான நிலைய கிடங்கில் கையாளப்பட்ட சரக்கு அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச சரக்கு முனையம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சரக்குகளை கையாள்கிறது. 2023 ஜனவரி மாதத்தில் சென்னை விமான நிலைய கிடங்கில் 2 கோடியே 35 லட்சத்து 93 ஆயிரம் கிலோ பொருட்கள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2022 ஜனவரியில் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரம் கிலோ பொருட்கள் கையாளப்பட்டன.
கடந்த ஜனவரி மாதத்தை விட, இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை விமான நிலைய கிடங்கில் கையாளப்பட்ட சரக்கு அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் சர்வதேச சரக்கு கையாளுதலும் கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் சரக்கு கையாளுதல் குறைந்துள்ளது.
கோவை சர்வதேச கிடங்கில் கடந்த ஆண்டு ஜனவரியில் 6.22 லட்சம் கிலோ சரக்கு கையாளப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்கு மட்டுமே கையாளப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய சர்வதேச கிடங்கு அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை விமான நிலைய சரக்குகளில் மாதந்தோறும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம். இந்த கையாளப்படும் பொருட்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவு மட்டுமே குறைந்துள்ளது.
ஏற்றுமதி அப்படியே உள்ளது. தற்போது அதிக அளவில் சொந்தமாக பொருட்களை உற்பத்தி செய்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்காக காத்திருக்கவில்லை.
மிக முக்கியமாக, 2022 இல் கொரோனாவின் 3 வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது வெளி நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அதில் முக்கிய பங்கு வகித்தன.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வது வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை உள்ளிட்ட தமிழக விமான நிலைய கிடங்குகளில் இறக்குமதி சரக்கு கையாளுதல் குறைந்ததற்கு இதுவே காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.